Friday, May 29, 2020

பாடல்களை சுமந்து திரிபவர்


     My Vikatan-னில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை:

     https://www.vikatan.com/oddities/miscellaneous/old-man-who-impressed-the-youngster-with-his-enthusiasm

     சில மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி சென்றிருந்தேன். மூன்று நாட்கள் விடுமுறையை நன்றாக செலவழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்கு முன்னதாக இரவு உணவருந்துவதற்காக அந்த உணவகத்துக்குள்
நுழைந்தேன்.

     பணம் செலுத்திவிட்டு நாமே சென்று உணவை வாங்கிக்கொண்டு அங்கிருக்கும் ஏதோவொரு இடத்தில் நின்றவாறு சாப்பிடும்படியான அமைப்பைக் கொண்டிருந்தது அவ்வுணவகம். நான் தோசை ஒன்றை வாங்கிக்கொண்டு அந்த அறையின் மையத்தில் இருந்த ஓர் இடத்தில் நின்று சாப்பிடத்  தொடங்கினேன்.

      திடீரென "பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்" என்ற பாடல் இருக்குரலாக கேட்கத் தொடங்கியது. ஒலிக்கும் பாடலுடன் யாரோ ஒருவர் ஒத்திசைத்து பாடிக் கொண்டிருப்பது நன்கு புலப்பட்டது. யாரது என்றவாறே பார்வையால் அந்த அறையை அளந்துக் கொண்டிருந்த போது சற்றே தளர்ந்த நடையுடன், சிறிய கண்களுடன், கறுத்த முடியுடனும் தனது சட்டைப் பையில் இருந்து பணத்தை தேடிக் கொண்டிருந்தார் ஒரு வயதானவர். அப்போதுதான் அந்த பாடல் அவ்வுணவகத்தில் ஒலிக்கவில்லை; அவரது மேல் சட்டையில் வைத்திருந்த அவரது கைப்பேசியில் இருந்து ஒலிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டேன்.

     வாங்கிய பில்லை கடை ஊழியரிடம் கொடுத்துவிட்டு அருகிலிருந்த குடிநீரை அண்ணாந்து குடித்தவர்  மீண்டும் பழைய இடத்திற்கு வந்துக்  காத்துக் கொண்டிருந்தார் அப்போது தனது கைப்பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த "பொன்மகள் வந்தாள்" பாடலை ஒத்திசைத்து பாடியவாறே...

     "முத்துகள் சிரிக்கும் நிலத்தில்
       தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
      முத்துகள் சிரிக்கும் நிலத்தில்
      தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
      பாவை நீ வா
      சொர்கத்தின் வனப்பை ரசிக்கும்
      சித்தத்தில் மயக்கும் வளர்க்கும்
      யோகமே நீ வா
      வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
      வீதியில் ஊர்வலம் விழி எல்லாம் நவரசம்"

      எனப் பாடிக் கொண்டே இருந்தவர் இடையிடையே வரக்கூடிய மெட்டுகளுக்கு தனது நாவால் குதிரையின் குளம்படி சப்தத்தை எழுப்பி அதன் பின்பு வரக்கூடிய வரிகளுக்குள் தன்னை கரைத்தவாரே "காளான் தோசை"யை வாங்கிக் கொண்டு நானிருந்த இடத்தில் வந்து நின்றார்.

     அங்கிருந்த கடிகாரத்தைப் மேலெழும்பி பார்த்தவாரே, "ஐயோ, மணி 8 ஆச்சா!! நேரம்தான் எவ்வளவு சீக்கிரம் போகுது? இப்பதான் எந்திரிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள ராத்திரி எட்டு மணி ஆய்டுச்சே!!" என தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார்.

     அப்போது கைப்பேசியில் வேறொரு பாடல் மாறி இருந்தது. எந்திரம் போல அவர் கையும் தோசையை இரு பகுதியாகப் பிரித்து ஒன்றை சாம்பாரிலும், மற்றொன்றை சட்னியிலும் மடித்து ஊறவைத்துக் கொண்டே அந்த பாடலில் தன்னையும் கரைத்துக் கொண்டிருந்தார்.

     பிறகு தோசையைப் பிரித்து, "என்னது? ஒரே வெங்காயமாதான் கெடக்கு, காளானே காணோம்" என அங்கலாய்த்துக் கொண்டு அதிலிருந்த காளானையும், வெங்காயத்தையும் பிரித்து வைத்து, ஊறிக் கொண்டிருந்த தோசையை சாப்பிட ஆரம்பித்தார்.

     இதற்கு ஊடாக இரண்டு பாடல்கள் மாறி இருந்தன. ஒரு வாய் தோசை, மறுவாய் பாடல் இடைடையே குளம்படிச் சத்த மெட்டு என எல்லாமே சரியான அலைவரிசையில் அரங்கேறிக் கொண்டிருந்தன - அவரைப் பார்த்துப்  புன்னகைத்தவாறே நகர்ந்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களையும் சேர்த்து.

     அப்போது அங்கு பணி புரிந்துக் கொண்டிருந்த சிறுவனை நோக்கி, " நீதான் வெங்காயம் அரிஞ்சயோ? பூரா வெங்காயமாதான் கெடக்கு" என பதிலை எதிர்பாராமால் கடிகாரத்தையும், தட்டையும், கைபேசியையும் மாறி மாறிப் பார்த்தவாறு சாப்பிட்டு முடித்தார்.

     அவர் அங்கிருந்து கை கழுவ நகரவே அச்சிறுவனிடம், "தம்பி, யாரிவரு? ஒங்க ரெகுலர் கஸ்டமரா?" எனக் கேட்டேன். அவன், "ஆமாண்ணா. தெனமும் சாய்ங்காலாம் 6 மணிக்குலாம் வந்துருவாரு.  டிபன் சாப்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சு டீ இல்லனா காபி சாப்பிட்டு போவாரு. எல்லாரும் அவர பாத்து சிரிப்பாங்க. ஆனா அவர் பாட்டுக்கு பாடிட்டு இருப்பாரு" என அவன் முடித்த போது அவர் டீ வாங்க நின்றுக் கொண்டிருந்தார்.

     இடைப்பட்ட நேரத்தில் அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், ஓய்வூதியமாக குறிப்பட்ட தொகை வந்துக் கொண்டிருப்பதால் அதை வைத்துக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார் எனவும் அவன் கூறினான்.

     திரும்பிப் பார்த்தால், தனது கையில் வைத்திருந்த டீ glass-ஐ ஒரு குழந்தையை தாலாட்டும் லாவகத்துடன் அதை இடம் வலமாக காற்றில் அசைத்துக் கொண்டு  "நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே. வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே" என்பதை தன்னை மறந்துப்  பாடிக் கொண்டிருந்தார்.

     வாடிக்கையாளர்களின் தட்டுக்களை எடுக்க அங்கு பணியாளர்கள் இருப்பினும் அவர் தனது தட்டையும், டீ glass-யும் தானே எடுத்துக் கொண்டு வைத்தார்.

     எல்லாம் நாடகமென அரங்கேறிக் கொண்டிருக்கும்போது, மிகச் சரியாக அல்லது அனிச்சையாக அப்பாடல் ஒலித்தது - "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது".

     அவர் அதைப் பாடியபடியே சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் தனது எல்லாப் பாடல்களையும் சுமந்தபடி மென் அலைவரிசையாய்....


நன்றி: விகடன்.


Tuesday, May 26, 2020

TRUECALLER எனும் வில்லன்

     My Vikatan-யில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை:

     https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-sarath-kumar-fan-and-college-days 

     அன்று அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் எனது கல்லூரியின் வகுப்புத் தோழனான ராஜூ. அதுநாள் வரையிலும் அவனை எப்போதும் அழைத்துப் பேசியிராத மற்றுமொரு வகுப்புத் தோழனான கார்த்திகேயன் அவனது அலைபேசி-க்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்திருக்கிறான். வேலைப் பளுவினால் அதை தொடர்ந்து நிராகரித்துக் கொண்டே இருந்தான் ராஜூ, கார்த்திகேயனின் அவசரத்தையும், அவஸ்தைகளையும் அறியாதவனாக.

      கார்த்திகேயன் - எங்கள் வகுப்புத்தோழன், எங்களுடன் கல்லூரி  விடுதியின்  வேறொரு அறையில் இருந்தவனும் கூட. சென்னையின் புறநகர் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கடலூரின் அருகாமையிலுள்ள ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்தவன். 

     நண்பர்களுடன் மிகப்பரவலான பழக்கம் ஏற்படுவதற்கு முன்னரே அவனது அறைத் தோழர்களால் "மொக்கை கார்த்தி" என அழைக்கப்பட்டவன். அதற்கான மிக எளிய காரணங்களில் ஒன்று  - அவன் சரத்குமார் ரசிகன் என்பதும்  கூட.

     முதலாமாண்டு விடுதி மாணவர்கள் தொலைக்காட்சி இருக்கும் அறைக்கு செல்ல அனுமதி இல்லை என்பது அங்கு எழுதப்படாத விதியாக இருந்தது. மிக அரிதாக சிலரிடம் மட்டுமே அப்போது செல்போன்கள் இருந்தன, எனினும் அவை நோக்கியா - 1100 காலத்தவை. அதனால் ஓரிரு மாதங்களுக்குள் சிலர் FM radio வாங்கி வைத்துக் கொண்டனர்.

     நாங்கள் கல்லூரிக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் "ஐயா" திரைப்படம் வெளிவந்திருந்தது. அதனால் அடிக்கடி "ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்கிற பாடல் ஒலிபரப்பப்படுவதுண்டு. அப்போதெல்லாம் "மொக்கை கார்த்தி" மிகுந்த பரவசத்துடன்," டேய், அந்த பாட்டை வைடா" என சொல்லிவிட்டு அதனுடன் ஒத்திசைத்து பாடுவான். FM -ல் நயன்தாரா பாட, சரத்குமார் பாடும் வரிகளை பெரும் பாவனைகளுடன் பாடிக் கொண்டிருப்பான், மிக குறிப்பாக இவ்வரிகளை-  "நேத்துவரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு. அது இன்றுமுதல் ஆனது எலவம் பஞ்சு" என அவன் பாடும் போது "சின்ராச கைலயே புடிக்க முடியாது" என்கிற வசனம்தான் நினைவுக்கு வரும்.

     ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவனது இம்சையை தாங்க முடியாமல் நண்பர்கள் அவனை வெகுவாக கிண்டல் அடித்துக் கொண்டிருந்தோம். FM -ல் சரத்குமார் பாடல் வரும் போதெல்லாம் அவன் காதில் விழாதவாறு மிக வேகமாக வேறொரு FM Station -க்கு மாற்றிக் கொண்டிருந்தோம். அதை கண்டுகொண்டவன், "அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை..." என தன் கண்களை சுருக்கிக்கொண்டு அறையின் மேற்சுவரைப் பார்த்துப் பாடுவான்.

      சில மாதங்கள் கழித்து பத்திரிக்கைகளில் அந்த அறிவிப்பு வந்தது - " சரத்குமார் நடிக்கும் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' இயக்கம் கௌதம் மேனன்" (அப்போது கௌதம் மேனன்-தான், GVM  அல்ல). நாங்கள் மிக அதிர்ச்சியானோம் கௌதம் மேனன்-சரத்குமாரா  என. ஆனால் அந்த அறிவிப்பை பார்த்தவுடன் "மொக்கை கார்த்தி" எங்களை பார்த்து சிரித்த அந்த சிரிப்பின் சாயலை "சூப்பர் deluxe" படத்தில் வரும் சிறுவன் அந்த DVD-யை கேட்டவுடன் அந்த அக்கா சிரிக்கும் நக்கலான சிரிப்புடன் தாராளமாக ஒப்பிடலாம்.

      அதன்பின்பு "பச்சைக்கிளி முத்துச்சரம்" பாடல்கள் வெளியாகின. எல்லா FM -களிலும் நேயர் விருப்பமானது. அப்பாடல்கள் ஒளிபரப்பாகாத எந்த நிகழ்ச்சியும் அப்போது இல்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றையும்  அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மொக்கை கார்த்தி," பாருங்கடா, கௌதம் மேனனுக்கே எங்க தலைவர் தேவைப்படுது" என எங்களை அற்பமாக பார்த்துச் சிரித்தபோது கௌதமின் தீவிர ரசிகனாக இருந்த அருண்,"பாரு, உங்க தலைவன் கௌதம் மேனனுக்கே flop தர போறாப்ல" என்ற போது கார்த்தி மட்டுமல்ல நாங்களுமே சற்று அதிர்ச்சியாகத்தான் செய்தோம்.

      அவனை எல்லோரும் "மொக்கை" எனக் கூப்பிட்டாலும் எனக்கு அவன் ஒரு விசித்திர நாயகன்தான்.  விடுதியில் தங்கியிருந்ததனால் எங்களுக்கு study leave என்பதும் semster holidays தான். அதனால் எல்லோரும் அவரவர்  ஊர்களுக்கு செல்வதில் குறியாக இருக்க அவன் அப்போதும் தனது வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கிவிடுவான். அவனது அலைவரிசைக்கு ஏற்ப இருக்கும் சிலரும் விடுதியிலேயே இருப்பதுமுண்டு. விடுதி என்பது அப்போது கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டவர்களின் சரணாலயம் அல்லது அரசாங்கம்.

     அந்த விடுமுறை நாட்களில் நன்கு உண்டு, உறங்கி, தொலைக்காட்சியில் படம் பார்த்துத் தவறிக்கூட புத்தகங்களைத் தொடாமல் அவனது கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பான்.

      தேர்வுக்கு முந்தையப்  பகல்களில் உறங்கி, பாடல்களில் திளைத்து, கவிதைகளில் மூழ்கி தனது சொர்க்கபுரியிலிருந்து நள்ளிரவில் மிக மெதுவாக நிகழ்காலத்திற்கு வந்திறங்குவான். தனது நண்பர்களிடம் மறுநாளைய தேர்வுக்கு உண்டான முக்கிய கேள்விகளைக் கேட்டறிந்து அதை ஓரளவு படித்துக் கொள்வான். அடுத்த நாள் தேர்வு முடிந்த பிறகு எங்களிடம் வந்து இதற்கு இதுதானே பதில் எனக் கேட்டறிந்து திருப்திக் கொண்டு மீண்டும் அவனது உலகத்தில் உள்புகுந்து தன்னை அரசானாக்கிக் கொள்வான்.

     அதிகம் வாசிப்பு பழக்கமற்ற அவனது எழுத்துக்கள் அத்தனை ஆழமானவை. மேலோட்டமாக படித்தால் புரிந்துக் கொள்ளமுடியாத அவனது எழுத்துக்களை அவன் தரும் தெளிவுரை அவ்வளவு ஆச்சரியப்படுத்தும். 

     ருடங்கள் உருண்டோட பணி நிமித்தமாக நான் பெங்களூரு வந்துவிட இத்தனை ஆண்டுகளில் அவனிடம் நான் இன்னும் பேசவில்லை. ஆனால், அன்று ராஜூவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது," மச்சி! அன்னிக்கு மொக்கை-ட்ட இருந்து contiuous - யா call வந்துட்டே இருந்தது. ஆனா, எனக்கு work load அதிகமா இருந்ததுனால என்னால அவன்கிட்ட பேசமுடியல. அப்பறம் அதை அப்படியே மறந்துட்டு ரூம்-க்கு வந்துட்டேன். உள்ள நுழையும் போதே அருண், "என்னடா, மொக்கை call பண்ணானா-னு கேட்டான். நானும் ஆமா மச்சி. ஆனா, நான் busy -யா இருந்ததுனால பேச முடியல. ஏன் என்னாச்சுன்னு கேட்டேன்".

     அருண், " அவனுக்கு வீட்ல பொண்ணு பாத்துருக்காங்க போல. நிச்சயதார்த்தம் அடுத்த வாரமாம். இவன் அந்த பொண்ணோட நம்பரை எப்படியோ வாங்கி call பண்ணிருக்கான். unknown number -ங்கிறதுனால அந்த பொண்ணு யாருடானு truecaller பாத்தா "மொக்கை கார்த்தி"னு போட்ருந்துச்சாம். அதுனாலதான் பயபுள்ள," யாருடா என்னை மொக்கை கார்த்தின்னு save பண்ணிருக்கீங்கனு வெறி புடிச்சு தேடிகிட்டு இருக்கான்" என சொல்லவும் அது தான் என ராஜூ என்னிடம் சொல்லிச் சிரிக்க என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை.


நன்றி: விகடன்.

    

Friday, May 15, 2020

நம் குழந்தைகளை குருடர்களாக்கும் சமூக அந்தஸ்து


     MyVikatan-யில் வெளிவந்துள்ள எனது கட்டுரை:


     இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பிள்ளைகளை படிக்க வைத்தல் என்பது படித்திராத பெற்றோர்களுக்கும், படிப்பைத் தொடர இயலாத பெற்றோர்களுக்கும் வைராக்கியம் சார்ந்த விஷயமாக இருந்தது. இன்று ஒவ்வொரு நிறுவனங்களில் தலைமை இடத்தை வகித்துக் கொண்டிருக்கும் நபர்களில் சரிபாதி அளவில் இருப்பவர்கள்கூட அப்படியான ஒரு குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும். ஆனால் அப்படிப் படிப்படியாக முன்னேறிய நடுத்தர வர்க்கமாகிய நாம் நமது அடுத்த தலைமுறையை சரியாக வழி நடத்துகிறோமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகத்தான் இன்று உள்ளது. இன்னும் நுட்பமாக சொல்லப்போனால் நாம் வளர்ந்த விதத்திற்கும், நம் பிள்ளைகளை வளர்க்கும் விதத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது உலகின் ஏதோவொரு ஏழை நாட்டில் எல்லாவற்றிற்கும் முட்டி மோதி முன்னேறி அதன் விளைவாக வளர்ந்த நாட்டில் குடிபெயர்ந்து  தான் பிறந்து வளர்ந்த நாட்டை ஏளனமான பார்ப்பதற்கு ஒப்பானதொரு உளவியல் நோய்.

     இன்று மெட்ரோ நகரங்களில் குடிபெயர்ந்து அதன் சமூக முன்னேற்றத்திற்கு ஏற்ப தங்களது வாழ்க்கை முறையை தகவமைத்துக் கொண்ட பெரும்பாலான (அத்தனை) பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுத்து வைத்திருக்கிற சூழலை தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சமூக சூழலை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் எதிர்வரக்கூடிய சமூக பிரச்சனைகளின் அபாயத்தை உணரக்கூடும்.

     ஆனால், தனக்கு கிடைக்காத ஒன்று தனது அடுத்த தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்கிற கண்முடித்தனமான அன்பினாலும், தனது பிள்ளைகள் எதற்குமே அவதியுறக் கூடாது என்கிற தற்கால  பெற்றோர்களின் சீழ் பிடித்த கற்பிதங்களால் அடுத்த தலைமுறையின் கண்களை சமூக அந்தஸ்து எனும் பெயரில் குருடர்களாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மிக வசதியாக மறந்துவிடுகிறோம்.


     22 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு அரசுப்பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய வகுப்புத் தோழனாகிய ராஜாராம் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. பள்ளி முடித்தவுடன் அவனுடனே சென்று அவன் வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்த எனது பாட புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு நகரத்தின் மையத்தில் இருக்கும் எனது வீட்டிற்கு திரும்புவதாக திட்டம். பள்ளிக்கு வடக்கு திசையில் சற்றே தூரத்தில் வரிசையாக இருக்கும் அந்த ஓட்டு வீடுகள் ஒரு ஓவியத்தின் காட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல. தூரத்திலிருந்து பார்க்கும் போது மிக அழகாக தெரிந்த அவ்வீடுகளை நாங்கள் நெருங்கி செல்ல செல்ல  அதன் சூழலியல் யதார்த்தம் வேறு என்பதை உணர்ந்துக் கொண்டேன். அங்கிருந்த ஒரு குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்றவன் அதுதான் தனது வீடு என்ற போது சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மிக குறுகிய பரப்பளவில் இரு அறைகளைக் கொண்ட குடிசை வீடு அது. அதன் இரண்டாம் அறை என்பது அவ்வீட்டின் இடது மூலையில் இரண்டடியிலான மண் சுவரை எழுப்பி அமைக்கப்பட்ட சமையலறை. நாங்கள் வாடகைக்கு அப்போதிருந்த வீடும் இரண்டறைகளைக் கொண்டது எனினும் நகரத்தின் மையத்தில் இருக்கிற எனது வீட்டிற்கும் நகரத்தின் எல்லையில் இருக்கிற நண்பனின் வீட்டிற்குமான வேறுபாடு என்ன என்பதை என்னால் அப்போது சரிவர புரிந்துக் கொள்ள இயலவில்லை.

     எனது புத்தகத்தை வாங்கிக் கொண்டு அவனை விளையாட அழைத்த போது, "கொஞ்சம் இரு டா. நான் வீட்டுப்பாடம் எழுதிட்டு வந்துடறேன்" என்றவனை "டேய். அதை நான் வீட்டுக்கு போனதுக்கப்பறம் எழுதேண்டா" என குரலுயர்த்தி சொன்னபோது, "இல்லடா. எங்க வீட்ல கரண்ட் வசதி கெடையாது. அதுனால வெளிச்சம் இருக்கும் போதே பண்ணாதான் உண்டு" என்றவனை ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தேன். எனது வாழ்விற்கும், அவனது வாழ்விற்குமான வித்தியாசத்தையும் கண்டுணர்ந்தது கிட்டத்தட்ட என் வாழ்வின் முதல் போதி நிழல்.

     அந்த சம்பவத்திற்கு பிறகு எனது வாழ்வில் நான் இருக்கக்கூடிய இடம் எத்தனை வசதியானது, ஆனால் நாம் இதற்கே இத்தனை புகார்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என புரிந்தது.

     அநேகமாக முப்பது வயதிற்கு மேல் இருக்கக்கூடிய இன்றைய தலைமுறையில் இருப்பவர்கள் ஒன்று எனது பிரதிநிதியாகவோ அல்லது ராஜாராமின் பிரதிநிதியாகவோ இருக்கக்கூடும். ஆனால், அங்கிருந்து நம் வாழ்வை தொடங்கியவர்கள் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதை கடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பெரும் அதிர்ச்சியாகவும், சமூக அச்சமாகவும் இருக்கின்றன.

     பெரு நகரங்கள் மட்டுமல்லாது இப்போது சிறு நகரங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது பரவலாகவும், அதை வாங்குவது பலரின் கனவாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்களாகவே இருக்கக்கூடும். அதனால் அங்கு வளரக்கூடிய பிள்ளைகளின் கண்களுக்கு இச்சமூகம் என்பது வசதிப்படைத்தாகவே தெரியக்கூடும். இந்த பார்வைக் குறைபாடு என்பது அங்குமட்டுமல்லாமல் அவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகளிலும், அவர்களை பொது போக்குவரத்துக்களான பேருந்துகளுக்கோ, இரயில்களுக்கோ பழக்காதவாறு நம் சமூக அந்தஸ்தை நிரூபிக்க கடனில் நாம் வாங்கி வைத்திருக்கும் கார்களில் அவர்களை அழைத்துச் செல்வதென ஒவ்வொன்றிலும் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம்.

     இவ்வாறு நமது ஒவ்வொரு செய்கைகளிலுருந்தும், அன்றாடங்களிலிருந்தும் நமது குழந்தைகளை நமக்கு கீழே பொருளாதாரத்தில் அடுக்கடுக்காக இருக்கும் பல சமூகத்திடமிருந்து பிரித்தே வைத்திருக்கிறோம். ஒருமுறை இதைப்பற்றி எனது அலுவலக நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த பெண் தோழி ஒருவர், "Hey, I do not want my kids to to mingle with those people in the society" என்ற போது மிக அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. அப்போது அவரவர் பால்யம் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும் போது எங்களுக்குள் பெரிதாக எந்தவொரு வித்தியாசமும் இல்லை அவரவர் ஊர்களைத் தவிர.

     நமது பால்ய காலத்தில் வசித்து வந்த தெருவில் பொருளாதாரத்தின் எல்லா அடுக்குகளில் இருந்தவர்களும் பெரும்பாலும் ஒன்றாகவே வசித்து இருந்தோம் (கிராமங்களின் நிலை வேறாக இருக்கக்கூடும்). அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பவரும், பூக்கடை வைத்திருப்பவரும், ஆட்டோ ஓட்டுபவரும், கடைகளில் பணி செய்பவர்களும், பேருந்து ஓட்டுநர்/நடத்துனர்களும், தள்ளு வண்டி வைத்து பிழைப்பவரும், நகலகத்தில் வேலை செய்பவரும், தச்சர், கொல்லர், மிதிவண்டிகளை வாடகைக்கு விடுபவர் என ஒரு தெரு என்பது கூடி வாழ்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பு. அங்கிருந்துதான் இன்றைய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பேராசிரியர்களும்,
மென்பொருள் வல்லுனர்களும் இன்னபிற நிபுணர்களும் வந்திருக்கிறோம்.


     நடுத்தர வர்க்கத்துக்கும் அதற்கு கீழேயுள்ள சமூகத்திற்கும் உண்டான உறவென்பது முன்னேற்றத்திற்கான உந்துசக்தி. அது சமூகத்தை முன்னேற்றும், போலவே அவரவர் நாட்டையும். இங்கே தனிமனித வெற்றி ஒருவகையில் சாத்தியம், ஆனால் ஒரு தனிச் சமூக வெற்றி என்பது எப்போதும் சாத்தியமற்றது.

நன்றி விகடன்.