Friday, April 29, 2011

நேர் நேர் தேமா

     வைரமுத்து சொன்னது போல "யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அந்த வகையில் தன் பணி நிமித்தம் காரணமாக எடுத்த சில பேட்டிகளை புத்தக வடிவமாக்கி இருக்கிறார் "நீயா நானா " கோபிநாத். திரையில் நாம் காணும் பேட்டி பிரபலங்களின் மனதை மட்டுமே பதிவு செய்கிறது. ஆனால், இந்த புத்தகத்தின் மூலம் பேட்டி எடுப்பவரின்  மனதையும் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு.
      பேட்டிகளை எழுத்தாக்கம் செய்யும் போது எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் வார்த்தைகளைக்  கையாண்டு இருக்கிறார். அதற்காக பேட்டி காணும் முன் ஏற்பட்ட படபடப்பு, மனதில் தோன்றிய கேள்விகள் என அற்புதமாக நம்மை அந்த இடத்திற்கே கூட்டி சென்று விடுகிறார்.

     "ஒரு சுய முன்னேற்ற நூலில் கூறிய அனைத்தும் உனக்கு ஒத்துவராது. உனக்கு என்ன தேவையோ, அதை நீ எடுத்துக் கொள்", என யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போல பல்துறை சாதனையாளர்களின் பேட்டிகளின் தொகுப்பு என்ற வகையில் இது முக்கியமான படைப்பாக மனதிற்குப்படுகிறது. 


புத்தகத்தின் முன்னுரையில் கோபிநாத் கூறியுள்ளதாவது:
     அரிச்சந்திரன் நாடகம் பார்த்து காந்தி, தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார் என்று சொல்வார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையை அது அப்படியே மாற்றி விடுமா என்ன? அது சாத்தியம் என்றால் அரிச்சந்திரன் நாடகம் பார்த்த அத்தனை பேரும் உண்மையே பேச வேண்டும் என்று காந்திபோல் முடிவு செய்திருக்க வேண்டும்.

     இந்த புத்தகத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

     என் வாய்ப்பின் மூலம் நான் சந்தித்த சிறப்பான மனிதர்கள் சிலர் பேசிய விஷயங்கள், அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் முன்னேற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 

     அவற்றை இனம் கண்டு ஆராய்கிற நுட்பத்தை, தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கிக் கொள்ளும் சிந்தனையைப் புத்தகத்தைப் படிப்பவரே கொண்டு வரவேண்டும் காந்தி கொண்டு வந்ததைப் போல. வேண்டுமானால் இந்த புத்தகம் அதற்குரிய ஆர்வத்தைத் தூண்டலாம்.

     இது சில நபர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ஏற்பாடு இல்லை. அவர்கள் கடந்து வந்த பாதையில் கற்றுக் கொண்ட உத்திகளை முன்வைக்கிற முயற்சி. 

     இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெலாம் உறுதி தருவதற்கில்லை. தன்னம்பிக்கை நம்முள் இருந்து தான் பிறக்கிறது என்பதை நானும் தீவிரமாக நம்புகிறேன். என்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்த புத்தகம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக் கூடும்.

     எழுதியது கோபிநாத் - ஆக இருக்கட்டும்.
     படிக்கிறவர்கள் காந்தி - ஆக இருங்கள்.
     அது தான் என் வேண்டுகோள்.
நன்றியுடன்,
கோபிநாத்.

நூல் விவரம்:- 
பெயர்: நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத் 
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் 
விலை: ரூ. 100 /- 

Wednesday, April 27, 2011

பொம்மைப் பயணி


குழந்தையின் குழந்தையாய்
ஊரெங்கும் பயணிக்கிறது
பொம்மை

Friday, April 15, 2011

மண்ணின் மைந்தர்கள்

மண் பிரசவிப்பது என்னவோ 
மரங்களைத்தான்.
ஆனால் -
அதைக் கொன்றுக் குவிக்கும் 
நம்மைத்தான் 
"மண்ணின் மைந்தர்கள் "
என்றழைக்கிறார்கள்.

Thursday, April 14, 2011

கண்ணீர் பூக்கள்

நிறம் மாறும் 
வேதனைகளுக்கு 
நிறம் மாறா 
அர்ச்சனை 
"கண்ணீர் பூக்கள்"

Tuesday, April 5, 2011

வாழ்தல் ஒரு கலை - V

     மனிதனால் தாங்க முடியாத துயரங்களுள் ஒன்று, தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம்  என்பதும். ஏமாற்றுதலும், ஏமாறுதலும் நபர் சார்ந்த விஷயம் மட்டும் அன்று; அது பெரும்பாலும் சமய, சந்தர்ப்ப சார்ந்த விஷயமும் கூட. நாம் அலட்சியப்படுத்தும்  விஷயங்களே நம்மை ஆட்டிப்படைக்கக் கூடியவையாகக் கூடும். நாம் ஏமாற்றத்தையும், ஏமாறுதலையும் அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், நாம் பார்வையாளனாக இருக்கும் வரையில்.

     அந்நாளில் சென்னையில் ஒரு புத்தகம் விற்கப்படுமாம் - எப்படியெல்லாம் சென்னையில் ஏமாற்றுவார்கள் என்பதை உள்ளடக்கியது. சாதாரண ஊர்களைக் காட்டிலும் சுற்றுலாத் தளங்களில் ஏமாற்று வேலைகள் அதிகம் என்பதை அறிவோம். அங்கு யாரோ தான் ஏமாற்றப்பட்டதை பகிர்ந்துக் கொண்டிருக்கும் வேலையில் நம் மனப் புத்தகம் ஒன்று குறிப்பெடுத்துக் கொள்கிறது அல்லது நாம் இவ்வாறு ஏமாற்றப்பட்டோமா என சரிப்பார்த்துக்  கொள்கிறது.

     ஆனால், நாம் நினைப்பது போல ஏமாறுபவனும், ஏமாற்றுபவனும் இரு வேறு நபர் அல்லர். ஒரு மனிதன் ஒரு நிலை வரைக்குமே ஏமாறுபவனாக இருக்கிறான். பிறகு அவனும் ஏமாற்றத் தொடங்குகிறான். ஒவ்வொருவரின் மனதிலும் இரு வேறு ஓநாய்கள் இருக்கின்றன. ஒன்று நல்லெண்ணம் கொண்டது. மற்றொன்று தீய எண்ணம் கொண்டது. எதற்குத் தீனி போடுகிறோமோ  ஆதுவே வளரும்.

  
     எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "கேள்விக்குறி" புத்தகத்தில் அவர் பகிர்ந்துக் கொண்ட கதை :-
அவன் மூர்க்கமானவன்; தன சுயநலத்துக்காக எவரையும் ஏமாற்றக் கூடியவன். ஆனால் அவன் தந்தையோ அந்த ஊரே போற்றும் அளவுக்கு நல்லவர்; நேர்மையானவர். அவர் எவ்வளவோ முறை சொல்லியும் அவன் ஏமாற்றுவதை நிறுத்துவதாக இல்லை. கடைசியில் ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து, "நான் உன்னிடம் எவ்வளவோ முறை கூறிவிட்டேன் ஆனாலும் நீ திருந்துவதாகயில்லை. இருக்கட்டும். இனி நீ ஒவ்வொரு முறை ஏமாற்றும் போதும் நம் வாசல் கதவில் ஒவ்வொரு ஆணியாக அடி. அது போதும் எனக்கு" என்றவாறு கூறிச் சென்றார்.



      அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை இனி கேள்வி கேட்ப்பாரில்லை  என சுதந்திரமாக சுற்றித் திரிந்தான். சில மாதங்கள் கழித்து இரவு வீட்டுக்கு வந்தவுடன் அந்தக் கதவைப் பார்த்து அதிர்ச்சியுற்றான். காரணம், சிறிது கூட இடைவெளி இல்லாமல் அதில் ஆணி அறையப்பட்டிருந்தது. அவனுக்கு மனசு வலித்தது. ஏனோ தான் செய்த ஏமாற்று வேலைகள் எல்லாம் கண்கள் முன் நிழலாடின. வீறிட்டு அழத் தொடங்கினான். பிறகு தன் தந்தையிடம் சென்று தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் தான் எவருக்கும் துன்பம் அளிக்காத வண்ணம் வாழப் போவதாகவும் சத்தியம் செய்தான்.

     அதைக் கேட்ட அவன் அப்பா சிறிய புன்முறுவலுடன், "நல்லது. இனி மக்களுக்கு உன்னாலான நல்லதை செய். நீ செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும்  நம் கதவில் அறையப்பட்ட ஆணிகளை ஒவ்வொன்றாக  நீக்கிவிடு" என்றார். 

     மகன் சிறிது நிம்மதி அடையலானான். ஆனால் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல நன்மை செய்வது அவ்வளவு சுலபமாய் இல்லை. ஒவ்வொரு நாளும் அவன் தன் வீட்டுக் கதவின் முன் நின்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆயின. 

     அவனது தந்தையும் மூப்பு காரணமாக படுத்த படுக்கையானார். அன்றொரு நாள், அவன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் தந்தையிடம் வந்து தான் கதவில் அறையப்பட்ட எல்லா ஆணிகளையும் எடுத்து விட்டதாகவும், இதோ தன் கையில் இருப்பது தான் கடைசி ஆணி என்றும் காண்பித்து, தான் இப்போது நல்லவனா என தந்தையிடம் வினவினான். தந்தை புன்னகைத்துக் கொண்டே மீண்டும் கதவை சென்றுப் பார்க்குமாறு கூறினார். திரும்பி வந்த மகனிடம் என்ன தெரிந்தது எனக் கேட்டார். அதற்கு மகனோ, "கதவு முழுவதும் சிறு சிறு ஓட்டைகளாக உள்ளன" என்றான். தந்தை மென்மையாக, " நீ செய்த தவறுகள் தான் அந்த கதவில் அறையப் பட்ட ஆணிகள். நீ திருந்துவதன் மூலம் அந்த ஆணிகள் பிடுங்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் நீ அறைந்ததன் விளைவுகளான ஓட்டைகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.